
விழுப்புரம் மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் ஓங்கி உயர்ந்த கல்வராயன்மலை உள்ளது. கிழக்கே விழுப்புரம் மாவட்டம், வடக்கே திருவண்ணாமலை, மேற்கில் சேலம் மாவட்டத்தை உள்ளடக்கி மேற்கு தொடர்ச்சி மலையை தொட்டுக்கொண்டுள்ளது இம்மலை. இதற்குள் எத்தனை அழகு உள்ளது என்பதை பார்த்தால் வியந்து போவார்கள். மலையடிவாரத்தில் ரம்மியமான கோமுகி அணையும், சிறுவர் பூங்காவும் உள்ளது. அணை கட்டும்போதே சுமார் 15 ஏக்கரில் அழகிய சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டதுடன், அதையொட்டிய மலைப்பகுதியில் குழந்தைகள் கண்டு மகிழும்வண்ணம் அழகிய சிலைகளும் அமைக்கப்பட்டது. அணை திறக்கப்பட்ட காலகட்டத்தில் சேலம், கடலூர், புதுவை மற்றும் விழுப்புரம் மாவட்டத்தின் இதர பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து கண்டுகளித்து சென்றனர். இடையில் பொதுப்பணித்துறையின் முறையான பராமரிப்பு இல்லாததால், பூங்கா சிறிது, சிறிதாக அழிந்து வந்தது. அதன்பிறகு கடந்த 25 ஆண்டுகளாகவே அணைப்பூங்கா சீரமைக்க முடியாமல் சமூக விரோதிகளின் கூடாரமாய் இருந்தது.
தற்போது பொதுமக்கள் வேண்டுகோளுக்கு இணங்கவும், தமிழக தொழில் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மோகன் பரிந்துரையின்பேரிலும், ரூ1.5 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அணையின் மேல்பகுதியில் உள்ள சிலைகள் சீரமைக்கப்பட்டு, வண்ணம் பூசப்பட்டு உள்ளது. ரூ25 லட்சம் மதிப்பில் சிறுவர் பூங்கா இடத்தில் வண்ண அலங்கார செடிகள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதுடன், அழகிய நிழற்குடையும், நடைபாதையும் பயணிகள் நலன்கருதி கட்டப்பட்டுள்ளது. இதனால் இந்த பொங்கல் நேரத்தில் மட்டும் அணையை பார்ப்பதற்கென்று சுமார் 50,000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனர். விடுமுறை தினங்களில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்களும் வந்து பொழுதுபோக்கிவிட்டு செல்கின்றனர்.
கல்வராயன்மலையில் சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கும் வகையில் ஓங்கி உயர்ந்த மரங்கள், வெள்ளிக்காசு கொட்டுவது போல அழகிய நீர்வீழ்ச்சிகள், படகு குழாம், சிறுவர் பூங்கா, தொங்கும் பாலம், மூங்கில் குடில் என ஏராளமான இடங்கள் உள்ளது. குறிப்பாக கல்வராயன்மலையில் உள்ள பெரியார், மேகம் நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதற்கென்றே பேருந்து, ஆம்னி பஸ், கார்களில் வந்து தங்கி ஆனந்த குளியல் போடுவதுடன், குடும்பத்துடன் பிரியாணி சமைத்து உண்டு மகிழ்ந்து செல்கின்றனர். அதைப்போல வெள்ளிமலையில் உள்ள படகுதுறைக்கும், அதையொட்டிய இரு சிறுவர் பூங்காவுக்கும் விடுமுறை தினங்களில் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இருந்தும், புதுவை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து படகு சவாரி செய்து மகிழ்ச்சியுடன் ஊர் திரும்புகின்றனர்.
எனவே கல்வராயன்மலையை சுற்றுலாத்தலமாக்க வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே மலைமக்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு சமூகநல அமைப்புகளும் கோரிக்கை விடுத்தும், அரசு செவிசாய்க்கவில்லை.அரசு கல்வராயன்மலையை சுற்றுலாத்தலமாக்கி அரசு அறிவித்தால், உடனே அதற்கான நிதியும் ஒதுக்கப்படும். அந்த நிதியைக்கொண்டு மலையின் மையப்பகுதியான வெள்ளிமலையில் பயணிகள் தங்கும் வகையில் ஓய்வு விடுதி கட்டப்படும். மேலும் பொழுதுபோக்கு இடங்களான படகுதுறை, சிறுவர் பூங்கா, நீர்வீழ்ச்சிகள் ஆகிய இடங்களில் ஓய்வு இல்லம் அமைப்பதுடன், கழிப்பிடமும் கட்டித்தர முடியும். இன்னும் தடுப்பு சுவர் இடிந்த படகுதுறை, உடைந்துபோன படகுகள் ஆகியவற்றை சரி செய்ய போதிய நிதி இல்லாமல் அரசு சீரமைப்பு பணியை கிடப்பில் போட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறை சார்பில் வெள்ளிமலை படகுதுறை அருகில் ரூ17 லட்சம் மதிப்பில் தமிழகத்திலேயே மிகவும் நீளமான தொங்கு பாலம் அமைக்கப்பட்டது. அந்த பாலத்தில் நின்று பார்த்தால் படகு சவாரி செய்பவர்களையும், படகுதுறையின் இயற்கை அழகையும் கண்டுகளிக்கலாம். அத்தகைய சிறப்பு மிக்க பாலம் கட்டி இரண்டு ஆண்டுகூட தாக்குபிடிக்கவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாலம் இன்றுவரை சுற்றுலா பயணிகள் நலன்கருதியும் கூட அரசு சரிசெய்யவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகவே பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் அங்கு பயணிகள் தங்குமிடம், பயணிகள் ஓய்வு இல்லம், கழிப்பிட வசதி மற்றும் பூங்கா, படகுதுறை, மேகம், கவ்வியம், சிறுக்கலூர் நீர்வீழ்ச்சிகள் சீரமைப்பு, பழுதான தொங்குபாலம், உடைந்த படகுகளை சரிசெய்ய போதுமான நிதிஆதாரம் இல்லை. தமிழக அரசு கல்வராயன்மலையை சுற்றுலாத்தலமாக போர்க்கால அடிப்படையில் அறிவிக்க வேண்டும் என மலைமக்கள், சுற்றுலா பயணிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.
வனவிலங்கு பூங்கா அமைக்க வேண்டும்
வெள்ளிமலையில் உள்ள படகு துறைக்கும், சிறுவர் பூங்காவிற்கும் இடையில் உள்ள இடத்தில், வனவிலங்குகள் அடங்கிய சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக கல்வராயன்மலையில் உள்ள வனவிலங்குகளான மயில், மான், கரடி, குரங்கு, செந்நாய், காட்டெருமை, முள்ளம்பன்றி, பச்சோந்தி மற்றும் பறவையினங்கள் உள்ளிட்டவைகளை கொண்டு வனவிலங்கு பூங்கா அமைத்தால் கூடுதலாக சுற்றுலா பயணிகள் வர வாய்ப்பு உள்ளது










