
விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மாவட்டமாகும். செஞ்சிக் கோட்டை, கல்வராயன் மலை ஆகியவை விழுப்புரத்துக்கு அருகில் உள்ள சுற்றுலா தளங்களாகும். திருக்கோயிலூர், திருவக்கரை முதலியவை அருகில் உள்ள புகழ்பெற்ற வணக்கத்
தளங்கள் ஆகும். தென்னாற்காடு மாவட்டத்திலிருந்து பிரிந்த மாவட்டம் விழுப்புரம். மயிலம் முருகன் கோயில், திருநங்கைகள் கூடும் கூவாகம் கூத்தாண்டவர் கோயில், சிங்கவரம் ஒற்றை கற்கோயில், செஞ்சிக்கோட்டை, சடையப்ப வள்ளல் பிறந்த திருவெண்ணை நல்லூர், ஆழ்வார்கள் பாடிய உலகளந்த பெருமாள் கோயில் உள்ள திருக்கோயிலூர், அழகிய மரக்காணம் கடற்கரை, மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயில் எனப் பார்க்க வேண்டிய சிறப்பிடங்களின் பட்டியல் நீள்கிறது.
திருக்கோயிலூர்
'அன்பே தகளியாக;ஆர்வமே நெய்யாக' என்ற பெரியாழ்வாரின் பாடல் பெற்ற தலம், திருக்கோயிலூர். முதலாழ்வார் மூவர் உலகளந்த பெருமாளைப் பாடிப் பரவியுள்ளனர். இங்குப் பெருமாளுடன் புஷ்பவல்லித் தாயாரும் கோயில் கொண்டுள்ளார். இது தவிர மற்றொரு சுற்றுலாத் தலமும் இருக்கிறது. பெண்ணையாற்றின் நடுவே உள்ள கபிலர் குன்றில் சங்க இலக்கியக் கவிஞர் கபிலர் கடைசிக் காலத்தில் தங்கியிருந்ததாகச் சொல்லப்படுகிறது. மாநில தொல்பொருள் ஆய்வுத் துறையினரின் பாதுகாப்பில் இக்கோயில் இருக்கிறது. கடலூர் - சித்தூர் பெருவழிச் சாலையில் விழுப்புரத்திலிருந்து 37 கி.மீ. தொலைவில் உலகளந்த பெருமாள் தரிசனம் கிடைக்கும்.
மேல்மலையனூர்
சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியான இடம் இது என்று ஒட்டக்கூத்தரின் தக்கயாகப் பரணி கூறுகிறது. மேல் மலையனூர் சுடுகாட்டில் வீற்றிருக்கும் அங்காளம்மனிடம் தோஷம் பீடித்த சிவன் பிச்சைக்காரனாகப் பிச்சை பெற்று தோஷம் நிவர்த்தியானதாகக் கூறப்படுகிறது. இதைக் குறிக்கும் மயானக் கொள்ளைத் திருவிழா புகழ்பெற்றது. மாசி அமாவாசையில் நடத்தப்படும் இத்திருவிழா, பத்து நாட்கள் நிகழும். இங்கு அமாவாசை இரவில் தங்கினால் நினைத்தது நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேல்மலையனூர் மகா ஏரியிலிருந்து பிறக்கும் சங்கராபரணி ஆறு, செஞ்சி வழியாகச் சென்று பாண்டிச்சேரி கடலில் கலக்கிறது. ஏரிக்கரையிலுள்ள துர்க்கை அம்மனும், சர்க்கரை விநாயகர் கோயிலும் பிரசிசத்தி பெற்றவை.
திருவெண்ணைநல்லூர்
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பார்களே. அந்தக் கம்பனை ஆதரித்துப் போற்றிய சடையப்ப வள்ளல் பிறந்த ஊர். பழமை வாய்ந்த சிவன் கோயில் ஒன்று இங்குள்ளது. விழுப்புரத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் திருக்கோயிலூர் சாலையில் அமைந்துள்ளது திருவெண்ணைநல்லூர்.
திருவக்கரை
திருவக்கரை என்றதும் கல்மரங்கள் ஞாபகத்திற்கு வரும். இங்குள்ள சோழர்கால சிவன் கோயில் புகழ்பெற்றது. பௌர்ணமி தோறும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடும் கோயில். இக்கிராமத்தில் புராதன காலத்தின் சாட்சியாகக் கல்மரங்கள் காணக் கிடைக்கின்றன.
மண்டகப்பட்டு
மக்களை ஆண்ட மன்னர்களின் கலை ஈடுபாட்டிற்கு அளவேயில்லை. காலத்தால் அழியாத சிற்பக்கலை உன்னதங்களாகக் காட்சிக்கு கவரி வீசுகின்றன குடைவரைக் கோயில்கள். மகேந்திரவர்ம பல்லவன் உருவாக்கிய புகழ்பெற்ற குடைவரைக் கோயில் இங்குள்ளது. விழுப்புரத்திலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், செஞ்சியிலிருந்து 17 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இக்கோயில் தொல்பொருள் துறையினரின் பாதுகாப்பில் இருக்கிறது.
எண்ணாயிரம்
இந்த ஊரில் 8000 சமணர்கள் வாழ்ந்துள்ளனர். இதனால் 'எண்ணாயிரம்' என்ற பெயர் ஊருக்கு வந்திருக்கிறது.










